புவனேஷ்வர்: நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஒடிசா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நாடு முழுவதும் நாளை (செப்.,13) மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான ‛நீட்' தேர்வு நடைபெற உள்ளது. ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 459 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 83 நீட் தேர்வு மையங்களுக்கு இலவசப் போக்குவரத்து மற்றும் மாணவர்கள் தங்குவதற்கான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர், கட்டாக், சாம்பல்பூர் உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் நீட் தேர்விற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‛கரியார் சாலையில் இருந்து சாம்பல்பூர் வரையிலும், ராயகடா முதல் சம்பல்பூர் வரையிலும், பட்ராக் முதல் புவனேஸ்வர் வரையிலும், கியோஞ்சர் முதல் புவனேஸ்வர் வரையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,' என ரயில்வே துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE