கம்மாபுரம்; கம்மாபுரம் பகுதியில், பெய்த கனமழை காரணமாக மணல் சரிந்து துார்ந்த வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்வேலி விரிவாக்க பணி காரணமாக பரவனாறு ஓடை, கம்மாபுரம் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. என்.எல்.சி., நிர்வாகத்தால் கரி வெட்டி எடுத்த பிறகு, கழிவுகள் மற்றும் மணல், கம்மாபுரம், சு.கீனனுார், கோபாலபுரம், ஊ.கொளப்பாக்கம், கொம்பாடிக்குப்பம், வி.சாத்தப்பாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொட்டப்படுகிறது.கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக என்.எல்.சி., மணல் மேட்டிலிருந்து, மணல் சரிந்து, பரவனாறு ஓடை மற்றும் தடுப்பு வாய்க்கால் துார்ந்தது. மேலும், கன மழை பெய்தால், இந்த ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, 500 ஏக்கர் பரப்பளவில், விளை நிலங்களை மணல் சூழ்ந்து, சம்பா சாகுபடி பணி பாதிக்கும் அபாயம் உள்ளது.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் என்.எல்.சி., நிர்வாகத்திற்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, பருவ மழை துவங்குவதற்குள், பரவனாறு ஓடை மற்றும் மணல் மேட்டின், தடுப்பு வாய்க்காலை துார் வார வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE