பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, விவசாயியிடம், 1.72 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கணபதிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி முத்து, 67. இவர், அதே பகுதியில், தன் தோப்பில், 'ரிசார்ட்' நடத்தி வந்தார். ரிசார்ட்டை விற்பனை செய்த பணத்தில், ௧ கோடியே, 72 லட்சத்து, 50 ஆயிரத்தை, கேரளாவில் உள்ள தன் வங்கி லாக்கரில் வைப்பதற்காக, நண்பரான ஆலத்துாரைச் சேர்ந்த அனுாப் குமார், 30, என்பவரிடம் கடந்த, 2ம் தேதி கொடுத்தார்.பணத்தை பெற்று சென்றவர் தலைமறைவானதால், போலீசில் புகார் அளித்தார்.
வால்பாறை போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு, மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த, ௨௪ - ௩௦ வயதுடைய, ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடம், ஒரு கார், ௫ லட்சம் ரூபாய், 'ஏர் பிஸ்டல்' மற்றும், நான்கு கத்திகளை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், '2ம் தேதி அனுாப் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், விவசாயி முத்துவிடம் பணம் பெற்று, கேரளாவில் தலைமறைவாகினர். 'அங்கு கூட்டாளிகளான மற்ற மூன்று பேர் என, ஆறு பேரும் ஆடம்பரமாக பணத்தை செலவு செய்துள்ளனர். ஐந்து பேர், காரில் மீனாட்சிபுரம் வந்த போது, சிக்கினர். அனுாப்குமாரை தேடி வருகிறோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE