அரசியல் செய்வதற்கு வேறு காரணம் கிடைக்காததால், எதிர்க்கட்சிகள், 'நீட்' தேர்வை கையில் எடுத்துள்ளன. நீட் தேர்வை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டுள்ளது. மாணவர்கள் தற்கொலைக்கு நீட் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது - நயினார் நாகேந்திரன்.
'தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், பிற மாநிலங்கள் பக்கம் போயிருக்க மாட்டார்களோ என்ற சந்தேகத்தை, அவர்களின் நீட் எதிர்ப்பு நிலைப்பாடு ஏற்படுத்துகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
கல்வி உரிமை பறிபோகும் போது, கலைஞர்கள், படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே, மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து, தமிழக திரை நட்சத்திரங்கள் குரல் கொடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
'படைப்பாளிகள், கலைஞர்களே, கொரோனாவால், அலறிக் கொண்டிருக்கும் போது, எங்கே உரிமைக்குரல் எழுப்பப் போகின்றனர்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.
அரியர் மாணவர்களுக்கு, தேர்ச்சி அளிக்கக் கூடாது என, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு பொறியியல் கூறியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பில் எந்த விதமான விதிமீறலும் இல்லை. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்ச்சியும் வழங்கவில்லை. அப்படியிருக்கும் போது, எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் - த.மா.கா., தலைவர் வாசன்.

'எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், நீங்கள் ஒருவர் தான், நியாயமாக பேசுகிறீர்கள்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.
தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள், மாணவர்களுக்கு தைரியம் வழங்க வேண்டுமே தவிர, அதை பொய் பிரசாரம் செய்து அரசியலாக்கக்கூடாது. தேர்வு என்ற பய அழுத்தத்தை, தி.மு.க., கொடுத்து வருகிறது - நடிகை காயத்ரி ரகுராம்.
'இந்த கருத்தை, பா.ஜ., தவிர்த்து, பிற தலைவர்கள் வலியுறுத்துவதே இல்லை...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி.
மத்திய, பா.ஜ., அரசுடன், அ.தி.மு.க., அரசு நெருங்கி இருந்தாலும், 'நீட்' தேர்வை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போகும், தி.மு.க., அரசு, நீட் தேர்வை தடுக்க முயற்சிகளை எடுக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து, எம்.பி.,க்களும், 'நீட்' தேர்வுக்கு எதிராக உள்ளனர். எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு, 'நீட்' தேர்வுக்கு எதிராக
குரல் கொடுப்போம் - எம்.பி., கார்த்தி சிதம்பரம்.
'தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தனர்...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், காங்கிரஸ், எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE