சென்னை: 'உ.பி., போலீசாருக்கு மட்டும் தனி சட்டம் இருக்கிறதா?' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
உ.பி., மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை, நான்கு பேர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். படுகாயங்களுடன் டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த செப்.,29ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரவோடு இரவாக அந்த பெண்ணின் உடல், ஹத்ராசுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு, உடல் தகனம் செய்யப்பட்டது. உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று, போலீசார் தகனம் செய்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேற்று சந்திக்க சென்ற ராகுல், பிரியங்காவை, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தடுத்த நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: ராகுல் மற்றும் பிரியங்காவை உ.பி., போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை எந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தினாலும், கோர்ட் அவர்களை உடனே விடுவிக்கும். வன்முறை செயல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. கைகளில் ஆயுதங்கள் இல்லை.
அமைதியான வழியிலேயே அவர்கள் போராட்டம் அமைந்தது. அதனை ஏன் போலீசார் தடுத்தனர். உ.பி., போலீசாருக்கு மட்டும் தனி சட்டம் இருக்கிறதா? நாட்டின் சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாதா? ஒரு கொடூர குற்றத்திற்கு எதிராக அரசியில் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்துவதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திப்பதிலும் என்ன தவறு இருக்கிறது? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE