சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.
01.அறுவகை இலக்கணச் சிறப்புகள்
ஆசிரியர்: முனைவர் த.முத்தமிழ்
வெளியீடு: காவ்யா
சென்னை - 24.
தொலைபேசி: 044 - 2372 6882
பக்கம்: 214 விலை: ரூ.220
கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர்.
எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் படைத்திருப்பதை விளக்குகிறார்.
நிலையியல்பில் குறில், நடு, நெடில் எனும் புதிய வகைப்பாட்டில் மாறுபட்ட மாத்திரை அளவுகளைக் கூறுவதோடு, ஆய்த எழுத்து கழுத்தில் பிறப்பதாகக் விளக்கிப் புதிய அணுகுமுறையில் இனப்படுத்துவதையும், எழுத்துக்களை ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்று வகைப்படுத்துகிறது.
இதை ஆய்ந்துரைத்து, புணர்ச்சியியல்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், மெய்ம்மயக்கம் போன்றவற்றில் அறுவகை இலக்கணம் மாறுபட்டு, பிற இலக்கணங்கள் ஏற்கும் ஒற்றளபெடையை மறுப்பதையும் குறிப்பிடுகிறார்.
பொதுவியல்பு, பிரிவியல்பு, சார்பியல்பு, திரிபியல்பு என்று வகைப்படுத்தப்பட்ட சொல்லிலக்கணம், பேச்சு வழக்கில் பிறழும் சொற்கள் ஏற்பதையும், சொற்களுக்கு நிறங்கள் வழங்குவதையும் அறிய முடிகிறது. பிரிவியல்பில் பல்வேறு பிரிவில் சொற்களை வகைப்படுத்தி, வேற்றுமை உருபுகளைப் பயன்பாட்டு நோக்கில் தொடரியல் அடிப்படையில் விளக்குவதும் மாறுபட்ட அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
பொருளிலக்கணத்தில் மரபிலிருந்து மாறுபட்டுப் பெண்களை மையப்படுத்தி, அகப்பொருளியலில் மட்டுமே துறை பேசப்படுவது, தலைவனின் நிலை கூறப்படாமை, புறப்பொருளியலில் நிலத்தியல்பில் கூறப்படும் ஐந்திணை விளக்கங்கள் போன்ற பலவும் விரிந்த ஆய்வுக்குரியன. இலக்கண ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய நுால்.
- மெய்ஞானி பிரபாகரபாபு
02. சேது காப்பியம் - 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்
ஆசிரியர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
வெளியீடு: கவியரசன் பதிப்பகம்
31, சாயி நகர் இணைப்பு, சின்மயா நகர்,
சென்னை - 92.
அலைபேசி: 72997 67525
பக்கம்: 472 விலை: ரூ.700

மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார். காப்பியத்தின் சுருக்கத்தை உரைநடையில் வழங்கியுள்ளார். இந்த உரைநடையைப் படிக்கத் தொடங்கினால், காப்பியத்தை படிக்காமல் விடமாட்டார்கள்.
கவிதைப் பயண வரலாற்றுடன் அந்நாட்டு வளங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதற்காகப் புதுடில்லியில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட அனுபவங்களையும் எளிய கவிதையில் வடித்துள்ளார்.
விருத்தப் பாடலையும், வெண்பாவையும் எளிமையாக எழுதிப் பழக வேண்டும் என்றால், இந்த நூலை எடுத்துப் படித்தால் போதும். எளிய நடையில் படைத்துள்ளார். எல்லாப் பக்கங்களிலும் கவியருவி பாய்கிறது. கவிதை நடையில் அமைந்த தன்வரலாற்றுப் பெருங்காப்பியம்.
- முகிலை ராசபாண்டியன்
03. ஆளும் திறனை வளர்ப்பது எப்படி?
ஆசிரியர்: முனைவர் பொ.பொன்முருகன்
வெளியீடு: இளையோர் இலக்கியம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை - 18.
தொலைபேசி: 044 - 2433 2924
பக்கம்: 130 விலை: ரூ.120

அன்றாட நடவடிக்கை, செயலை கூர்ந்து கவனிப்பதால் வாழ்க்கை பாதை மாறுமா... மாற்றலாம் என நிறுவ முயல்கிறது இந்த நுால். வெறுப்பை துறந்து, வெற்றிப் படிகளில் ஏற வைக்கும் மந்திரங்களை விளக்குகிறது. ஈடுபாட்டுடன் வாழ்ந்து, அன்றாட நிகழ்வு களை அணுக கற்றுத்தருகிறது.
புரியும் வகை விளக்கப்படங்களுடன் மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. குறுந்தலைப்புகளில், தகவல்கள் தொகுத்து கூறப்பட்டுள்ளன. சிறு செயல்களை கவனிப்பதால், பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எண்ணம், சொல், செயல், சைகை, புற வாழ்க்கை என அனைத்திலும் கவனம் செலுத்தி, எளிமையான அறிவுரைகளை தருகிறது. வாழ்வில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. செயல்களில் உள்ள வரலாற்று பின்னணி, அவற்றுக்கு உலக அளவிலான அங்கீகாரம் போன்றவற்றை அழுத்தம் திருத்தமாக உரைக்கிறது. நம்பிக்கை மிகுந்தவர்கள் முன்னேற துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சிரத்தையுடனான உழைப்பு நுாலின் முழுப் பகுதியிலும் தெரிகிறது.
- அமுதன்
04. அழகன் முருகன்
ஆசிரியர்: லட்சுமி ராஜரத்தினம்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ்
மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 76 விலை: ரூ.90

பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்... பார் போற்றும் தயாளன்... பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன் முருகனைப்பற்றி ஆயிரம் பேர் பாடினாலும் தீராது.
சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் திருவிளையாடலை, அழகு தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர் லட்சுமி ராஜரத்தினம்.
பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தருக்கு கழுத்தணி வழங்கி, அவரின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய முருகன், பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனுக்கு தண்டனை வழங்கி, அவரின் கர்வத்தை அழித்தொழித்தான்.
வித்வத் தாம்பூலம் பெறுவதற்கு தகுதி உடையவன் அழகன் முருகனே என்கிற கதை, அவனின் பெருமையை பக்தர்களுக்கு உணர்த்தும்.
முருகனைப் பற்றி எத்தனை பேர் எழுதினாலும், படிக்க படிக்க அவன் மேல் கொண்ட பக்தி பெருகிக் கொண்டே போகும்.
- எம்.எம்.ஜெ.,
05. தற்கால சிறார் எழுத்தாளர்கள்
ஆசிரியர்: ஆர்.வி.பதி
வெளியீடு: நிவேதா பதிப்பகம்
10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை - 92.
அலைபேசி: 89393 87276
பக்கம்: 250 விலை: ரூ.250

சிறுவர் இலக்கியம் படைத்த எழுத்தாளர்களின் சுருக்கமான வரலாறு. தமிழகம் மட்டுமன்றிப்பிற மாநிலங்களில் வாழும் குழந்தை எழுத்தாளர்கள், 101 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பங்களிப்பைச் சுருங்கச் சொல்கிறது.
இன்றைய குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கிறது. அவர்களின் பிற படைப்புகளையும் தெரிவிக்கிறது. இலக்கியத்திற்குப் பங்காற்றிவரும் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. எழுத்தாளர்களின் பணியை ஓரிரு பக்கங்களில் தகவலாகத் தந்திருப்பதுடன் முகவரியையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தை இலக்கியத்திற்கான கையேடாகவும், தகவல் ஆவணமாகவும் திகழ்கிறது இந்நுால்.
- ராம.குருநாதன்
06. இனியாவது நம்புங்களேன்!
ஆசிரியர்: அ.திருமூர்த்தி
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி: 1447, சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 316 விலை: ரூ.200

அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, 'டாலர் கனவு' காண்பவனாகவும், விதவை யான பின் பழைய காதலனே ஏற்றுக்கொள்வதை, 'புதிய வாழ்க்கையாகவும், பட்டா வாங்க படும்பாட்டை, 'அடுத்த கலெக்டர் ரெடியா' கதையிலும், 'பிச்சைக்காரி' கதையில் பெண்ணின் நேர்மையும் பதிவாகியுள்ளன.
பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நுால்.
- பின்னலுாரான்
07. செய்தி எழுதப் பழகுவோம்
ஆசிரியர்: ஆ.குணசீலன்
வெளியீடு: வசந்தா பிரசுரம்
சென்னை - 33.
அலைபேசி: 90948 75747
பக்கம்: 128 விலை: ரூ.90

பத்திரிகைகளுக்கு செய்தி எழுதுவது குறித்து அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். பத்து தலைப்புகளில் சிறு கட்டுரைகளை உள்ளடக்கியது.
ஈர்க்கும் வகையில் எளிமையாக செய்திகள் எழுதுவது பற்றி விளக்குகிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு உதவும்.
08. யுவர் பேபீஸ் பர்ஸ்ட் 75 வீனிங் ரிசிப்பீஸ் அண்டு டயர்ட் சார்ட்ஸ்
ஆசிரியர்: பிரியம்வதா சந்திரமவுலி
வெளியீடு: நொஷன் பிரஸ்
தொலைபேசி: 81473 59500
பக்கம்: 106 விலை: ரூ.150

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கான உணவு ஆலோசனை புத்தகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதலுடன் விளக்க படங்களும் உள்ளன.
ஆறு மாதம் முதல், 1 வயதுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வழிகாட்டுகிறது. உணவு தயாரிப்பு குறிப்புகளும், உணவு வகைகளும் அட்டவணையாக தரப்பட்டுள்ளன. தாய்மார்களுக்கு மிகவும் உதவும்.
உணவளிக்கும் நடைமுறை, உணவு அறிமுகப்படுத்த வேண்டிய காலம், உணவளிக்க உதவிக்குறிப்பு மற்றும் தந்திரங்கள், தாய்ப்பால் ஊட்டும் போது செய்யக்கூடாதவை, பயண உணவு என பிரத்யேக தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE