சென்னை : ''மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் தரும்படி, கவர்னருக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், சட்டம் படித்த, ஆதிதிராவிடர் பட்டதாரிகளுக்கு, தொழில் துவங்குவதற்காக, ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமை வகித்து, 63 பட்டதாரிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கான உதவித்தொகையை வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது: மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி, கவர்னருக்கு அழுத்தம் கொடுத்து உள்ளோம். அவரை கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல, அவர் எங்களிடம் தெரிவித்த கருத்துக்களை வெளியில் கூற முடியாது. ஒப்புதல் அளித்த பின், மருத்துவ கலந்தாய்வு நடக்கும்.
கவர்னருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியதில் தவறு இல்லை. ஆனால், தன் போராட்டத்தால் தான் ஒப்புதல் கிடைத்தது என, பெயர் எடுக்க முயற்சிக்கிறார். வன்னியர் சமூகத்துக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசு முடிவெடுக்கும். தேர்தல் அறிக்கையின்படி,தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும். 'குரூப் - -4' தேர்வில் எந்த மாற்றமும் இருக்காது. பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதலாம். சசிகலா வந்தாலும், வரவில்லை என்றாலும், அவருடைய குடும்பத்திற்கு தான் கவலையும், மகிழ்ச்சியும் இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE