சென்னை : பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் விற்பதற்காக வெங்காயம் வாங்க கூட்டுறவு துறை அதிகாரிகள் மஹாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பெரிய வெங்காயம் பயன்பாடு அதிகம் உள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தினமும் லாரிகளில் வெங்காயம் வருகிறது.அம்மாநிலங்களில் பெய்த கன மழையால் வெங்காயம் வரத்து பாதித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வெங்காயம் கிலோ 130 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
இதையடுத்து கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் 79 பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. அந்த கடைகளில் குறைந்தளவில் விற்கப்படுவதால் பலருக்கு வெங்காயம் கிடைப்பதில்லை.
எனவே மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக 'நாபெட்' எனப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் வாயிலாக மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் லாசல்கான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெங்காயம் வாங்கப்பட உள்ளது. இதனால் கூட்டுறவு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு புனே நகருக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மொத்த விலை சந்தைகளுக்கு சென்று வெங்காயம் வாங்கி லாரிகளில் தமிழகத்திற்கு அனுப்ப உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE