மாஸ்கோ: ''சீனாவுடன் ராணுவ கூட்டணி அமைப்பது, தற்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான, சீனா மற்றும் ரஷ்யாவின் உறவு பதற்றமான நிலையில் உள்ளது. இந்நிலையில், சீனாவும், ரஷ்யாவும் அதிகம் நெருக்கம் காட்டி வருகின்றன. அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, அமெரிக்காவுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிய உள்ளது.இதை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக, இரு நாடுகளும் பேசி வருகின்றன.இந்நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த, வெளியுறவுத்துறை கொள்கை நிபுணர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில். ரஷ்ய அதிபர் புடின் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:சீனா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது. சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க, அது உதவி உள்ளது. அதே நேரத்தில், சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைப்பதற்கு, தற்போதைக்கு தேவையில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறோம். ஆனால், அதில் இறுதி முடிவை அமெரிக்கா தான் எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.ரஷ்ய அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE