சென்னை : ''குறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, அதிகளவில் மக்கள் வருவதால், தமிழகம், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
சென்னை, வடபழநியில், 'போர்டிஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
உயர் மருத்துவ சேவை
போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம், நாடு முழுதும் பல இடங்களில், மருத்துவமனைகளை துவங்கி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சென்னை, அடையாறில், இந்த மருத்துவமனை ஏற்கனவே இயங்கி வருகிறது. தற்போது, வடபழநியில் அனைத்து நவீன வசதிகளுடன், புதிய மருத்துவமனையைதுவங்கி இருப்பது, தமிழகம், இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்பதை, வலுவாக்குவதாக அமையும்.ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, அனைவருக்கும் உயர் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், மருத்துவ துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.உயர் மருத்துவ சேவைகளை வழங்குவது மட்டுமின்றி, மிகச்சிறந்தமனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும், தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தரமான சிகிச்சை
குறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், அதிகளவில் தமிழகத்திற்கு வருகின்றனர். இதன் வாயிலாக, தமிழகம், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், படிப்படியாக மருத்துவ கல்லுாரிகள் துவங்க வேண்டும் என்பது, ஜெயலலிதாவின் கொள்கை.
அதன் அடிப்படையில்,2011ம் ஆண்டு, 1,945 ஆக இருந்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள், தற்போது, 3,400 ஆக உயர்ந்துள்ளன.ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலுார், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.தற்போது, இந்த மருத்துவ கல்லுாரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால், வரும் ஆண்டுகளில், கூடுதலாக, 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவை மெய்ப்பிக்கும் வகையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
நமக்கெல்லாம் பெருமை
மருத்துவ துறையில் முன்னேறிய நாடுகளை விட, நம் நாடு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி, மக்களை காப்பாற்றியுள்ளது.நம் நாட்டு மருத்துவர்களின் செயல், நமக்கெல்லாம் பெருமை. அந்த வகையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வடபழநி போர்டிஸ் மருத்துவமனை, மக்களுக்கு சிறந்த, தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவன மேலாண்மை இயக்குனர் அஷூதோஷ் ரகுவன்ஷி, தலைமை இயக்க அதிகாரி அனில் வினாயக், சென்னை மண்டல இயக்குனர் சஞ்சய் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE