கோவை:திருமாவளவன் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை. இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகரிக்கச்செய்துள்ளது. எம்.பி., என்று பார்க்காமல் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமாலை வலியுறுத்தியுள்ளார்.

மனு தர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இதற்கு பா.ஜ. உள்ளிட்ட இந்து மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.,வினர் திருமாவளவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ. மகளிரணி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
கோவை பா.ஜ.மகளிர் அணி சார்பில், அதன் மாவட்ட தலைவி ஜெயதிலகா தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு, 500 க்கும் மேற்பட்ட பெண்கள், கையில் கங்கண கயிறு கட்டிக் கொண்டு, இந்து சமூக பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்யக் கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பா. ஜ., மாநில துணைத் தலைவர்கள் அண்ணாமலை, கனகசபாபதி, கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில்,பா.ஜ.,வினர் திருமாவளவனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அவரது உருவப் படங்களை செருப்பால் அடித்து எரித்தனர் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னதாக பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து பெண்களை அவமானப்படுத்தி திருமாவளவன் பேசியது தவறு. தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகிறார். எந்த இந்து தர்ம நூலிலும் திருமாவளவன் சொன்ன கருத்துகள் இல்லை. ஆங்கிலேயர்கள் மதமாற்றம் செய்ய எழுதிய நூலில் இருப்பதை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறார். இக்கருத்தை இந்து தர்மம் ஏற்கவில்லை.
2016 க்கு பிறகு பா.ஜ., மிகப்பெரிய சக்தியாக வருவதை விரும்பாமல் குறி வைத்து பா.ஜ.,மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழக பெண்களின் கோபத்தை பா.ஜ.,பிரதிபலிக்கிறது. குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்தது. வேதனையளிக்கிறது.2021 தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும். பா.ஜ.,எந்த மதத்திற்கும் எதிரான கட்சி இல்லை.
மனுஸ்மிருதி விவாதம் செய்யும் விஷயம் அல்ல. இவர்கள் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகமாக்கியுள்ளது. திருமாவளவனை எம்.பி., என்று பார்க்காமல் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE