மும்பை: பிரபல, 'டிவி'யின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டது, அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது.

அமித் ஷா உட்பட பல மத்திய அமைச்சர்கள், இந்த கைதை கண்டித்துள்ளனர். மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா ஆகியோரை, தன் விவாதங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார், அர்னாப். காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் விமர்சித்தார்.
இந்த விவகாரம், காங்., மூத்த தலைவர்களிடையே விரிசலை உருவாக்கிவிட்டது. 'எதற்கு வழக்கு மேல் வழக்கு போட வேண்டும்... இதனால், நிலைமை மோசமாகும். தேவையில்லாத வேலை' என, காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் முணு முணுக்கின்றனர். மற்றொரு பக்கம், இந்த விவகாரத்தில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தான் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது கட்சியை சேர்ந்தவர் தான், மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சராக உள்ளார்.

அவரது உத்தரவின்படி தான், அர்னாப் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேக்கு, கெட்ட பெயரை ஏற்படுத்த நடத்தப்படும் உள்குத்து என்றும் சொல்லப்படுகிறது.காங்கிரஸ் மற்றும் சரத் பவாரை எதிர்த்து அரசியல் செய்த சிவசேனா, தற்போது, இவர்களுடனே கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. அர்னாப் கோஸ்வாமி கைது, கூட்டணியில் பல பிரச்னைகளை உருவாக்கி விட்டது என்பது தான் உண்மை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE