சென்னை:குடியிருப்பு திட்டங்களுக்காக, கையகப்படுத்துதல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலங்களின், உரிமையாளர்களுக்கு தடையின்மை சான்று வழங்கும் பணிகளை, வீட்டுவசதி வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்களுக்காக, நிலங்கள் கண்டறிய பட்டன. இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கான, முதல் கட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டது.அதன்பின், இந்நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில், இறுதி கட்ட பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட நிலங்களின் பழைய உரிமையாளர்கள், அவற்றை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.இவ்வாறு விற்பனை செய்வதையும், அதில் தனியார் நிறுவனங்கள், கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கும், வீட்டுவசதி வாரியம் ஆட்சேபம் தெரிவித்தது.
சில நிலங்கள் சம்பந்தமாக, வழக்குகள் நிலுவையில் உள்ளன. கையகப்படுத்துதலில் தொடர்புடைய நிலங்களை விற்க, பயன்படுத்த, அதன் உரிமையாளர், வீட்டுவசதி வாரியத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும். இதற்கு, வீட்டுவசதி வாரியம் ஒத்துழைப்பதில்லை என்று, கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கையகப்படுத்துதல் பட்டியலில் உள்ள நிலங்களின், உரிமையாளர்களுக்கு தடையின்மை சான்று வழங்கும் பணிகளை, வீட்டுவசதி வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது.ஒரு வாரத்தில், 150க்கும் மேற்பட்டோருக்கு தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உரிமையாளர்களுக்கு தடையின்மை சான்று வழங்குவதால், வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு நிலம் கிடைப்பதில் சிக்கலாகும். வாரியத்தின் சொத்து மதிப்பு குறையும். எதிர்காலத்தில் வீட்டுவசதி வாரியத்துக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என, வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் அச்சமடைந்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE