பாட்னா: ''பீஹார் சட்டசபை தேர்தலில் பண பலம் ஆள் பலம் மற்றும் சூழ்ச்சியால் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது'' என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் தே.ஜ. கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியின் சட்டசபை தலைவாக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மிக குறைவான ஓட்டுகளை பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மனசாட்சி இருந்தால் அவர் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட கூடாது. ஆனாலும் நாற்காலி மீதான அவரது ஆசை போகவில்லை.பீஹார் மக்கள் மாற்றத்தை விரும்பினர். பண பலம் ஆள் பலம் மற்றும் சூழ்ச்சியினால் தே.ஜ. கூட்டணி வென்றுள்ளது. அந்த மோசடிகள் குறித்து தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE