நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரத்தை சேர்ந்தவர் வேதகிரி,52; இவர் கடலுார் அரசு மருத்துவ மனை எதிரே பேட்டரி விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை தனது மனைவி காந்திமதியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கடைக்கு சென்றார்.அப்போது மர்ம நபர்கள் பட்ட பகலிலேயே வீட்டின் தெரு கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை திருடிச் சென்றனர். இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்த வேதகிரி வீடு உடைத்து திருடு போனது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ், டி.எஸ்.பி.,பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் வீரமணி சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கிருந்து 500 மீட்டர் துாரத்தில் கல்லுாரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருடர்கள் முகம் பதிவாகியிருக்கிறதா என போலீசார் ஆய்வு செய்தனர்.மோப்பநாய் நீண்ட தூரம் ஓடியும் யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE