கிருஷ்ணகிரி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு மெஜஸ்டிக் லட்சுமணபுரியை சேர்ந்தவர் விஸ்வநாத். இவர் மகன் பால்எபினேசர், 22; இவரது நண்பர்கள் பெங்களூரு, கத்ரகுப்பேவை சேர்ந்தவர்கள் பாபு, 20; புனித்பாபு, 18; இவர்கள் அனைவரும், பெங்களூருவில் உள்ள, ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கின்றனர். மற்றொரு நண்பரான, காட்டன்பேட் பகுதியில் பிரின்டிங் பிரஸில் வேலை செய்யும், லட்சுமணபுரியை சேர்ந்த கமலேசன், 19; என, நான்கு பேரும் இரண்டு இருசக்கர வாகனத்தில், சென்னையில் உள்ள பால்எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில், பங்கேற்க நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டுள்ளனர். பால்எபினேசர், பாபு ஆகியோர் பல்சர் பைக்கிலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர், ஒரு பைக்கிலும் வந்தனர். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பம் அருகே உள்ள வெத்தலை தோட்டம் என்ற இடத்தில் அதிகாலை, 2:30 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, பால் எபினேசர், பாபு சென்ற பைக் மீது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE