தேனி : தேனி மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது.தேனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் வள்ளி - தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று காலை சுவாமிக்கு காப்புக் கட்டுதல் தீபாராதனை நடந்தது.
சுப்பிரமணியர் சன்னதியில் பக்தர்களுக்கு சஷ்டி விரதம் அனுசரிப்பிற்கான காப்புக் கட்டப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில்,வேல்முருகன் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில்களில் காப்புக்கட்டுதல் நடந்தது. போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் தக்கார் அண்ணாதுரை தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகனுக்கு கலச சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கூடலுார்: கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் 23 ம் ஆண்டு கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். சுந்தரவேலவருக்கு பால் அபிசேகம், சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிேஷக நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஞானம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டியை யொட்டி சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE