பனமரத்துப்பட்டி: பிடாரி அம்மன் கோவிலில், கையில் புத்தகத்துடன் சிறுவர்களின் சிலை வைத்து, குழந்தைகள் கல்வி அறிவு பெற வேண்டி, பெற்றோர் வேண்டுதல் வைக்கின்றனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தத்தில், பிடாரி அம்மன் கோவில் உள்ளது. அங்கு, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி, ஆச்சா மரத்தில் தொட்டில் கட்டி பக்தர்கள் வேண்டுதல் வைக்கின்றனர். விவசாயம் செழிக்க, தொழில் பெருக, கடன் பிரச்னை முடிவுக்கு வரவும், வேண்டுதல் வைக்கின்றனர். அது நிறைவேறிய பின், ஐப்பசி திருவிழாவில், பிடாரி அம்மனுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். மொட்டை அடித்தல், ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சிறப்பம்சமாக, தங்கள் குழந்தைகள், நல்ல கல்வி ஞானம், அறிவு பெற்று, உயர் கல்வி படித்து, பெரிய உத்தியோகத்துக்கு செல்ல, பெற்றோர் வேண்டுதல் வைக்கின்றனர். அதற்காக, சிறுவர்கள், கையில் புத்தகத்துடன் நிற்பது போன்று, கோவில் வளாகத்தில் சிலை வைக்கின்றனர். இதன்மூலம், தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, பெரிய பதவிக்கு செல்வர் என, பெற்றோர் நம்பிக்கை வைத்துள்ளனர். வேண்டுதல் நிறைவேறிய பின், அம்மனுக்கு காணிக்கை செலுத்தி, மீண்டும் சிலை வைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE