அரூர்: தொடர் மழை பெய்த போதும், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். கடந்த, சில நாட்களாக அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும், சித்தேரி மலைப்பகுதியில் கனமழை பெய்யாததால், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால், தடுப்பணை நிரம்பவில்லை. நேற்று நிலவரப்படி, தடுப்பணையில் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 25.57 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு, தடுப்பணை திறக்கப்படாததால், விவசாயம் பாதித்த நிலையில், நடப்பாண்டு, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்த போதும், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லாததால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE