ஈரோடு: கொடுமுடி தம்பதி கொலையில், தந்தை, மகன் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சிட்டுபுள்ளாபாளையம் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமசாமி, 50, அவரின் மனைவி அருக்காணி, 49; கடந்த, 13ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன், 49, அவரது மகன் சூர்யா, 23, முருகானந்தம் மகன் கிருபா சங்கர், 24, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிட்டு புள்ளாபாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் மதுசூதனன், 20; இவருக்கு கடந்த, 13ல் பிறந்த நாள். இதை கொண்டாடும் வகையில், தனது நண்பர்களான நவீன், 20, கார்த்தி, 23, ஜீவானந்தம், 24, ஜீவானந்தன், 20 மற்றும் சூர்யா, 23, கிருபாசங்கர், 24, ஆகியோருடன், சிட்டுபுள்ளாபாளையத்தில், சாலையில் நின்றபடி, மது குடித்து கும்மாளமிட்டபடி இருந்தனர். அன்றிரவு, 8:45 மணிக்கு ராமசாமி மகள் மேனகா, தன் கணவர், மகனுடன் டூவீலரில் தந்தை வீட்டுக்கு சென்றார். போதையில் இருந்த ஏழு பேர் சீண்டவே, மேனகா கண்டிக்க, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கைகலப்பு நடக்க, ஊர்மக்கள் சமரசம் பேசி, மேனகாவை அழைத்து சென்றனர். மகளுக்கு ஆதரவாக ராமசாமி, அருக்காணி, கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம், ரகளையின் போது, கும்பல் தள்ளிவிட்டதில் காயமடைந்த மேனகா, கணவருடன் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சை பெற சென்று விட்டார். போதையில் ரகளை செய்து, தன்னை தள்ளி விட்டது குறித்து, கொடுமுடி போலீசில் புகார் செய்ய போவதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் பிரச்னைகளை தொடர்ந்து சூர்யா, கிருபாசங்கரை தவிர, மற்ற அனைவரும் வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் மதுபோதையில், அரிவாளுடன் வந்த சூர்யாவின் தந்தை சாமிநாதன், அடி வாங்கியதோடு, வழக்கிலும் சிக்குவதா? என கேள்வி எழுப்பி, மகனை கண்டித்து, சீண்டியுள்ளார். இதையடுத்து மூவரும் ராமசாமி வீட்டுக்கு சென்றுள்ளனர். ராமசாமி, அருக்காணியை சூர்யா அரிவாளால் வெட்டிக் கொல்ல, மற்ற இருவரும் வேடிக்கை பார்த்துள்ளனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம் பொது இடத்தில் மது போதையில், ரகளையில் ஈடுபட்ட, மதுசூதனன் உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE