மோகனூர்: பூக்கடைகள், சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடைகள் கட்டப்பட்டு வாடடைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றில், மளிகை, மொபைல் போன், பூக்கடை, ஹார்டுவேர்ஸ், மெடிக்கல் உள்ளிட்டவை உள்ளன. அதில், பூக்கடை அமைந்துள்ள கடைகள், தங்கள் எல்லையை தவிர்த்து, சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து கடை விரித்துள்ளனர். அதனால், சாலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விசேஷ நாட்களில், மாலை மற்றும் பூக்கள் வாங்குவற்கு வருபவர்கள், தங்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை, சாலையில் நிறுத்திவிடுகின்றனர். அப்போது, ஒரு வழி பாதையாக மாறிவிடுகிறது. இது, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. அதனால், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர், பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பது, அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE