பாட்னா: பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், 69, தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்றார்.
பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 125 இடங்களைப் பெற்றது. கடந்த முறை, 71 இடங்களில் வென்ற, ஐக்கிய ஜனதா தளம், தற்போது, 43 இடங்களில் மட்டுமே வென்றது. அதே நேரத்தில், கடந்த தேர்தலில், 53 இடங்களில் வென்ற, பா.ஜ., 74 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் அதிக இடங்களில் வென்றதால், முதல்வர் பதவியை, பா.ஜ., கோருமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், 'தேர்தலுக்கு முன் செய்த ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய ஜனதா தளத்தின், நிதிஷ் குமார் தான் முதல்வராக பதவியேற்பார்' என, பா.ஜ., கூறி வந்தது. இந்நிலையில், தே.ஜ., கூட்டணியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வராக, நிதிஷ் குமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன், மாநில கவர்னர் பாஹு சவுகானை சந்தித்து, ஆட்சி அமைக்க, அவர் உரிமை கோரினார்.

அதன்படி, இன்று (நவ.,16) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் முன்னிலையில் 7வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். இதில் அவர் தொடர்ச்சியாக 4வது முறையாக முதல்வராக பதவியேற்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர்களாக பா.ஜ.,வின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் பதவியேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE