புதுடில்லி : ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை கிடைக்கக் கூடிய கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை, விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
‛கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, பார்லிமென்ட் சட்டம் இயற்ற வேண்டும்' என, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு, 2018ல் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், டில்லியை சேர்ந்த, லோக் பிரஹாரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், ‛கிரிமினல் குற்றங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆனவர்கள், ஐந்து ஆண்டு சிறை தண்டனை கிடைக்க கூடிய கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, கோரப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி, எல்.என்.ராவ் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
குற்றவாளிகள் அரசியலில் நுழைவதை கட்டுப்படுத்த பார்லி சட்டம் இயற்ற வேண்டும் என, 2018ல் அரசியல்சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது.ஆனால், இது தொடர்பாக, பார்லிக்கு உத்தரவிட முடியாது என, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பார்லி தான் முடிவெடுக்க வேண்டும். எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE