கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத, 10 ஆயிரத்து, 103 ?பேரிடம், 22.77 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா பரவாமல் தடுக்க, முன் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மீது, அபராதமாக, 200 ரூபாய், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு, 500 ரூபாய், பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்கள் மீதும், கொரோனா தொற்றுள்ள கட்டுப்பாட்டு பகுதியை மீறி வெளியே செல்வோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நிலையான இயக்க நடைமுறை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, போலீசார், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைப்புகள் மூலம், அதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது, கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டை மீறி, நடைமுறையை பின்பற்றாதவர்களை கண்டறிந்து, இதுவரை, 10 ஆயிரத்து, 103 பேரிடம், 22 லட்சத்து, 77 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE