ஆரணி: ஆரணியில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து, வீடு இடிந்த சம்பவத்தில் மேலும், இரண்டு பெண்கள் பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் புதுகாமூரை சேர்ந்தவர் முக்தாபாய், 50, பூ வியாபாரி; இவரது வளர்ப்பு மகள் மீனா, 18; இவர்களது வீடு அருகே ஜானகிராமன், 45, என்பவர், அவரது மனைவி காமாட்சி, 35, மகன்கள் சுரேஷ், 15, ஹேமநாத், 13, ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் சந்திரம்மாள், 65, என்பவர் வசித்து வந்தார். முக்தாபாய் கடந்த, 15ல் காலை, 7:00 மணிக்கு டீ போட சமையல் காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது, அறையில் கசிந்திருந்த சமையல் காஸ் தீ பிடித்ததில், பயங்கர சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் முக்தாபாயின் வீடு முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. சந்திரம்மாள் வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய, காமாட்சி, அவரது மகன் ஹேமநாத், சந்திரம்மாள் ஆகியோர் பலியாயினர். படுகாயமடைந்த முக்தாபாய், மீனா, ஜானகிராமன், சுரேஷ் ஆகிய நான்கு பேர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று, முக்தாபாய், அவரது வளர்ப்பு மகள் மீனா ஆகியோர் உயிரிழந்தனர். இதனால், இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE