சேலம்: பள்ளி மானிய தொகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, செலவழிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆண்டுதோறும் பள்ளி மானிய தொகை வழங்கப்படுகிறது. இதன்படி, 15 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளுக்கு, 12 ஆயிரத்து, 500 ரூபாய், 16 முதல், 100 மாணவர்கள் வரை, 25 ஆயிரம் ரூபாய், 101 முதல், 250 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய், 251 முதல், 1,000 வரை, மாணவர்கள் இருப்பின், 75 ஆயிரம் ரூபாய், 1,000 மாணவர்களுக்கு மேல் இருப்பின், ஒரு லட்ச ரூபாய் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான மானியத்தொகை, பள்ளி மேலாண்மை குழு வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதை செலவழிப்பதற்கான வழிமுறைகளை, மாநில திட்ட இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக, பள்ளி திறக்கும் முன், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பள்ளி மானிய தொகையில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், பள்ளி வளாகத்தில் சோப்பு, சானிடைசர், கிருமிநாசினி, துப்புரவு பொருட்கள் இருப்பு வைத்தல், தெர்மல் ஸ்கேனர் வாங்குதல், சுத்திகரிப்பு பணி உள்ளிட்டவைகளுக்கு, முன்னுரிமை கொடுத்து, செலவு செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE