பெங்களூரு: ''தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுப்பதுபோல், தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வுகளை உருவாக்குவதிலும், இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. தலைநகர் பெங்களூரில், 23வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு, நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில், எடியூரப்பா பங்கேற்றார்.
டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர், மோடி பேசியாதாவது:என் தலைமையிலான அரசு எப்போதும், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது. அதற்காக பல கொள்கைகளை, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் தான், ஊரடங்கு காலத்திலும், பணிகள் தங்கு தடையில்லாமல் நடந்தன. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் கிடைத்தது.அதே நேரத்தில், வைரஸ் தாக்குதல், தகவல் திருட்டு என, தொழில்நுட்ப பிரச்னைகளும் உள்ளன. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். இங்கு காணப்படும் தீர்வு, உலக நாடுகளுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். இதற்கான அறிவு, திறன் உள்ள இளைஞர்கள் நம்மிடம் உள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE