கோவை: கோவையில் ரோட்டோரத்தில் படுத்துறங்கி, மிச்ச மீதி உணவை உண்டு வாழ்ந்த காலத்தை கனடா கோடீஸ்வரர் மலரும் நினைவுகளுடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
கனடா, டொரோண்டாவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன், 50. கனடாவின் சிறந்த சமையல் நிபுணரானவர், கடந்தாண்டு ஒரு பெரிய ஓட்டலை துவக்கினார். கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது சிறுவயது கஷ்டங்கள் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல அனுபவமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.இவரது எட்டு வயதில் கோவையில் ரோட்டில் படுத்துறங்கி, குப்பை தொட்டி சாப்பாட்டை உண்டு வாழ்ந்ததை கனடா ஆன்லைன் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஷாஸ் சாம்சன் கூறியுள்ளதாவது:தென்இந்தியாவில், ஜவுளி நகரமான கோவையில், ரயில்வே டிராக் ஒட்டியிருந்த குடிசை பகுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வந்தேன். தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில், என்னை சகோதரர்கள் விட்டு சென்றனர். அதன்பின், அவர்களை நான் பார்க்கவில்லை. எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் சுற்றி திரிந்தேன்.அங்குள்ள ஓட்டல் முன் தினமும் அமர்ந்து கொள்வேன். அங்கு குப்பை தொட்டியில் மீதமாகும் ஒட்டல் உணவுகளை கொட்டுவார்கள். அதை சாப்பிட்டு வளர்ந்து வந்தேன். இரவு நேரங்களில் சினிமா தியேட்டர் முன் படுத்து துாங்கினேன். என்னை போல் பலரும் படுத்திருப்பார்கள். நான் தான் அந்த இடத்தை சுத்தம் செய்து வைப்பேன். பின், இரவு அனைவரும் அங்கு படுத்து துாங்குவோம்.
ஒரு நிமிட மாற்றம்
ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் என்னை பார்த்து விசாரித்து, மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த ஒரு நிமிடம் தான், என் வாழ்க்கையை மாற்றியது. அந்த காப்பகத்தில் எட்டு வயதாக இருந்த என்னை, 1979ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த சாம்சன் தம்பதி தத்தெடுத்தனர். என்னை கனடா அழைத்து வந்து செல்லமாக, பாசத்துடன் வளர்த்தனர். எனது விருப்பம்போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் உணவுக்காக அலைந்ததால், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என, விரும்பினேன். இதன்படி எனது வளர்ப்பு பெற்றோர் சமையல் கலை பிரிவு படிக்க வைத்து, தற்போது பெரிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். நான் எப்போதும் நேரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

அன்று நான் ரோட்டில் சுற்றித்திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்காவிட்டால், எனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது. தற்போது என்னைபோல் உள்ள, 22 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இதேபோல் சாம்சன் தம்பதியினர் எனக்கு உதவியதால் தான் என்னால் இப்போது மற்றவர்களுக்கு உதவ முடிகிறது.இவ்வாறு, நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கோவையில் குப்பை தொட்டி உணவை உண்டு, ரோட்டோர குழந்தையாக இருந்த சாம்சன், தற்போது சிறந்த சமையல் கலைஞராக மாறி, பெரிய ஓட்டல் நடத்துவது வெற்றிபெறுபவர்களுக்கான முன்னுதாரணமாக இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE