புதுடில்லி : ''உலகின் முதலீட்டு மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்,'' என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின், தேசிய பன்னாட்டு நிறுவனங்களின் கருத்தரங்கில் பங்கேற்று, பேசியதாவது:
இந்தியாவில், பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர முடியாமல், தேக்கத்தில் இருந்தன. இத்தகைய சூழலில் கொரோனா, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், மத்திய அரசு, கொரோனா உருவாக்கிய நெருக்கடியை, பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. கொரோனாவால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், நல்வாய்ப்பெனக் கருதி, பல ஆண்டுகளாக தேங்கியிருந்த, பொருளாதார சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தினார்.
உலகின் முதலீட்டு மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். நிதித் துறை, சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE