மும்பை:பிரபல நடிகை கங்கனா ரணாவத், அவரது மூத்த சகோதரி ரங்கோலி சண்டேல் ஆகியோரை தேசதுரோக வழக்கில் கைது செய்ய இடைக்கால தடை விதித்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேச துரோகம்மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள மும்பையில் வசிக்கும் பிரபல நடிகை கங்கனா ரணாவத், அவரது மூத்த சகோதரி ரங்கோலி சண்டேல் ஆகியோர், சமூக வலைதளங்களில் சில கருத்து பதிவுகளை வெளியிட்டனர்.
இதைஅடுத்து, இருபிரிவினருக்கு இடையே கலவரத்தை துாண்டுதல், தேச துரோகம் உட்பட சில பிரிவுகளில், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
'சம்மன்'வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், 'விசாரணைக்காக போலீசார் மூன்று முறை, 'சம்மன்' அனுப்பியும், மனுதாரர்கள் ஏன் ஆஜராகவில்லை' என, கேள்வி எழுப்பினர். 'வரும், ஜன., 8ம் தேதி மும்பையின் பாந்த்ரா போலீஸ் நிலையத்தில், இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை, கங்கனா தரப்பு வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, கங்கனா, அவரது சகோதரி ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை, ஜன., 11க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அத்துடன், 'இவர்கள் மீது, தேச துரோகம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் என்ன உள்ளது' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து அன்றைய தினம் விரிவான விசாரணை நடத்தப்படும் என, கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE