சேலம்: கொள்ளை அடிக்க திட்டமிட்டு, காரில் வந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். சேலம், இரும்பாலை போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தாரமங்கலம் பிரதான சாலையில், வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தியதில், நான்கு பேர் இருந்தனர். விசாரணையில், சேலம், தீவட்டிப்பட்டியை சேர்ந்த சரவணன், 25, கிச்சிப்பாளையம் கார்த்திக், 32, திருச்சி, லால்குடி ராஜா, 25, திருச்சி, காந்திநகர் அரவிந்தன், 21, என தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், இடைப்பாடியில், தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை அடிக்க வந்ததும் தெரிந்தது. மேலும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில், பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து, பணம், வாட்ச், பெண்களின் புகைப்படங்கள், மொபைல் சிம்கார்டுகளை, பறிமுதல் செய்தனர். இதுதவிர, சேலத்தில் உள்ள பிரபல நகை கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டது குறித்தும் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE