ஈரோடு: குண்டும், குழியுமான சாலையில், நாற்று நட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு, திண்டல் அருகே, ஜீவா நகரில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். ஜீவா நகரில் இருந்து ரிங் ரோட்டை இணைக்கும் சாலை செல்வதால், திண்டல் பகுதியிலிருந்து ரிங் ரோட்டுக்கும், ரிங்ரோட்டில் இருந்து திண்டல் பகுதிக்கும், ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் திட்ட பணிகளுக்காக தோண்டிய சாலையை மீண்டும் சீரமைக்கவில்லை. இதனால் ஜீவா நகர் சாலை, குண்டு, குழியாகி விட்டது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள், சாலையில் நேற்று தேங்கியிருந்த தண்ணீரில், நாற்று நாட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திட்டப்பணிகளுக்கு தோண்டிய சாலைகளை சீரமைக்காத நிலையில், மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழை நீர் தேங்கி, சேறு சகதியாகி, நடந்து செல்வதே சவாலாகி விட்டது. பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. மெத்தனம் தொடர்ந்தால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE