சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்கிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு வடக்கே இன்று இரவு 11 30 மணிக்கு மேல் கரையை கடக்க துவங்கியது. புயல் கரை கடக்கும் பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மிக கனமழையும் கொட்டி வருகிறது. மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் கடக்கும் பகுதியில் உள்ள புதுச்சேரி கடலூர் மாவட்டத்தில் மிக கன மழை கொட்டி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர்., சாலையிலும் கனத்த மழை கொட்டி வருகிறது.

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை தி.மலை, சேலம் மாவட்டங்களில் தற்போது மிதமான மழை பெய்யத் துவங்கியுள்ளது. தற்போது வரை கடலூரில் 16.5 செ.மீ., மற்றும் புதுச்சேரியில் 15 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE