சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, கோயில் நிலத்தில் அமைக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக அக்.,29 ல் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். ஆனால், அக்கூட்டம் நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்பே முதல்வர், கலெக்டர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கிவிட்டன. 100 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அரசுக்கு ரூ.1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்'' என வாதிட்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு வழங்க ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முடிவு செய்துள்ளார். பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிச.,9 ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, அதுவரை கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE