புதுடில்லி :முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேரறிவாளனுக்கு, மேலும் ஒரு வாரம், 'பரோல்' வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவர், தனக்கான தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பின், பிரதான கோரிக்கை தொடர்பான வழக்கை, இறுதி விசாரணைக்காக, அடுத்த ஆண்டு ஜன., 19க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே, பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, மேலும், 90 நாட்கள் பரோலை நீட்டிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமை யிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பேரறிவாளனுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டுள்ள பரோலுடன், கூடுதலாக ஒரு வாரம் பரோலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், பரோலை நீட்டிப்பது இதுவே கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE