பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' பிரிவு துவங்கப்பட்டுள்ளது.உடலில் அதிகமான சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற காரணங்களினால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள், கோவை தனியார் மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற அதிக செலவாகிறது.இதனால், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' பிரிவு துவங்கப்பட்டது. கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் இந்த பிரிவு இல்லாததால், பொள்ளாச்சி அல்லது கோவைக்கு சென்று வந்தனர்.கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' பிரிவு துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், தமிழக அரசு 'டயாலிசிஸ்' பிரிவு துவங்க உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, இரண்டு யூனிட் உடன் 'டயாலிசிஸ்' பிரிவு துவங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில், இப்பிரிவை, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.சப்-கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா முன்னிலை வகித்தனர். கோலார்பட்டி அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் அர்ச்சனா, டாக்டர் பொன்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.டாக்டர்கள் கூறுகையில், 'கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், தலா ஆறு லட்சம் மதிப்பில் இரண்டு 'டயாலிசிஸ்' இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், நோயாளிகள் பயன் பெறலாம். மருத்துவமனையில், பல் பிரிவு, நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ளது,' தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE