சேலம்: போலீசுக்கு, வாரம் இருநாள் கவாத்து பயிற்சி கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுதப்படையில், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிவோருக்கு, உட்சரகம் வாரியாக, சனிக்கிழமையில் கவாத்து பயிற்சி நடத்தப்படுகிறது. காலையில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்காதோருக்கு, மாலையில் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில், போலீசின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ்தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவு: ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார், சனியில் நடத்தப்படும் கவாத்து பயிற்சியில், 70 சதவீதம் பேர், தொடர்ந்து, செவ்வாயில் நடக்கும் பயிற்சியில், 30 சதவீதம் பேர் பங்கேற்க வேண்டும். அதை, உயர் அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது: கவாத்து பயிற்சியில், சட்டம் ஒழுங்கு போலீசார், பங்கேற்காமல் இருந்தனர். அவர்களுக்கு, வாரம் ஒருநாள் நடத்தப்பட்ட பயிற்சி, இரு நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும், 'ஆர்டர்லி'கள், எதாவது ஒரு காரணத்தை குறிப்பிட்டு, பயிற்சிக்கு வருவதை தவிர்க்கின்றனர். இந்த உத்தரவுக்கு பின், அவர்கள் பங்கேற்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE