ஈரோடு: வரத்து சரிவு, தேவை அதிகரிப்பால், கொப்பரை தேங்காய் விலை, ஐந்து மாதத்தில் கிலோவுக்கு, 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் மாவட்ட பகுதிகளில், தேங்காயை கொப்பரையாக்கி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சொசைட்டி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், காங்கேயம் மார்க்கெட்டில் விற்கின்றனர். இரு மாதமாக வரத்து குறைந்து, தேவை அதிகரித்த நிலையில், பெருந்துறை சொசைட்டியில் நேற்று முன்தினம் கிலோ, 128.89 ரூபாயாக உயர்ந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்., முதல் அக்., வரை தேங்காய், கொப்பரை தேங்காய் சீசனாகும். மற்ற காலங்களில் வரத்து குறையும். நடப்பாண்டில் இயற்கையாக தேங்காய் வரத்து குறைவு. பண்டிகை, வடமாநிலங்களின் தேவை அதிகரிப்பால், தேங்காயாக விற்கின்றனர். தேங்காயாக விற்கும்போது லாபம் அதிகம் கிடைப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் அதில் ஆர்வம் காட்டுகின்றனர். தேங்காய் எண்ணெய், பிற உணவு பொருள் பயன்பாடு, மருந்து தயாரிப்புக்காக கொப்பரை தேங்காய் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கடந்த ஜூலை மாதம் ஒரு கிலோ, 90 முதல், 97 ரூபாய், ஆக.,ல், 100 ரூபாய்க்கும் விற்றது. செப்.,ல், 110 ரூபாயை கடந்து, அக்.,ல் 115 ரூபாயானது. நேற்று முன்தினம், 128.89 ரூபாயாக விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், மரத்தில் காய் இல்லாததால், வரும் நாட்களில் தேங்காய், கொப்பரை தேங்காய் வரத்து குறையும். அதேசமயம் தேவை அதிகமாக உள்ளதால், விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE