ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, ஒற்றை யானை தாக்கியதில், பெண் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த, கடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்; இவரது மனைவி சரஸ்வதி, 42; இவர், நேற்று காலை, 6:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள, விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டிச் சென்று தூக்கி வீசியது. இதைப்பார்த்த மக்கள் சத்தம் போட்டதால், மேற்கொண்டு சரஸ்வதியை தாக்காமல், யானை அங்கிருந்து சென்றது. படுகாயமடைந்த சரஸ்வதியை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனையிலும், பின் மேல்சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர், நேரில் விசாரணை நடத்தினர். ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் ஒற்றை யானை உட்பட, நான்கு யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள், வனத்துக்கோ, அதிகாலை நேரத்தில் விவசாய நிலத்துக்கோ செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE