புதுடில்லி: விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் ‛டில்லி சாலோ' என்ற பெயரில் டில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநில விவசாயிகளும் டில்லி நோக்கி வாகனத்தில் பேரணியாக வந்து போராட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவுள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக விவசாய சங்கங்களை அழைத்துள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE