புதுடில்லி:'ட்ரோன்' எனப்படும், ஆளில்லாத குட்டி விமானங்களை தடுக்கும் அல்லது அழிக்கும் கருவியை, ராணுவத்துக்கு வழங்க, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆளில்லா விமானங்களின் செயல்பாடு, சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைகளில், இந்த விமானங்களை பயன்படுத்தி, ஆயுதங்களை வீசுகிறது. இதை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இதற்காக சீனாவிடமிருந்து, பாகிஸ்தான் சமீபத்தில், 25க்கும் அதிகமான, ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளது.
தாக்குதல்
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள், இந்த விமானங்களை பயன்படுத்தி, தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர்.இதையடுத்து, இந்த ஆளில்லா விமானங்களை தடுத்து அல்லது அழிக்கும் கருவியை, டி.ஆர்.டி.ஓ,. தயாரித்துள்ளது. இந்த கருவி, ஆளில்லா விமானங்களின் தகவல் தொடர்பை துண்டிப்பதுடன், லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இந்த கருவி, ஆளில்லாத விமானம் பறந்து வருவதை முதலில் தடுக்கும். அதையும் மீறி உள்ளே வந்தால், அதை தாக்கி அழிக்கும். டில்லி செங்கோட்டையில், சுதந்திர தினத்தின் போது, பிரதமர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசியபோது, அவரது பாதுகாப்பிற்காக இந்த கருவி பயன்படுத்தப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில், இந்த கருவியையும் சேர்க்க முடிவு செய்யப் பட்டு உள்ளது. பிரதமர் வீட்டு பாதுகாப்பிலும், இந்தக் கருவி பயன்படுத்தப் பட உள்ளது.மேலும், எதிரி நாடு மற்றும் பயங்கரவாதிகளின் ஆளில்லா விமானங்களை அழிக்க வசதியாக, ராணுவத்தில் இந்த கருவியை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE