ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று,
முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் சிறையில் உள்ளனர். 'இவர்களை
விடுதலை செய்ய வேண்டும்' என, அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
இது
தொடர்பான வழக்கு நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது.கடந்த, 30 ஆண்டுகளாக
சிறையில் உள்ள இவர்களை, கவர்னர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை
செய்ய வேண்டுமென, தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிபாரிசு
செய்தது.விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது இந்த
விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. தமிழக அரசின் சிபாரிசின் மீது, கவர்னர்
எப்போது முடிவெடுக்கப்போகிறார் என உச்ச நீதிமன்றமும் கேள்வி
எழுப்பியிருந்தது.
இந்நிலையில், விரைவில் அதிரடி முடிவு வெளியாகும் என,
டில்லி அரசியல் அதிகார வட்டாரங்களில் பேசப்படுகிறது. சமீபத்தில், தமிழக
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் டில்லி வந்து, பிரதமர், உள்துறை அமைச்சர்
ஆகியோரைச் சந்தித்தார்.அப்போது இந்த விவகாரம் குறித்து ஆலோசனை
நடத்தப்பட்டதாம். 'தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரையும் விடுதலை
செய்யும் உத்தரவில் கையெழுத்திடுங்கள்' என, கவர்னருக்கு டில்லியிலிருந்து
உத்தரவு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி அடுத்த மாதம் சென்னை
வருகிறார். அதற்கு முன்னதாக, கவர்னர் இந்த உத்தரவில்
கையெழுத்திட்டுவிடுவார் என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE