சென்னை : 'தமிழகத்தில், எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க, உறுதிஏற்க வேண்டும்' என, பொது மக்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி, முதல்வர் இ.பி.எஸ்., விடுத்துள்ள செய்தி:மக்களிடம், எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், ஒவ்வோர் ஆண்டும், டிச., 1 உலகஎய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து, 'உலகளாவிய ஒற்றுமை; பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்' ஆகும். எய்ட்ஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு தனி கவனம் செலுத்தியதன் காரணமாக, தமிழகத்தில், எச்.ஐ.வி., தொற்றின் சதவீதம், 2010 -- 11ம் ஆண்டு, 0.38 சதவீதத்தில் இருந்து, 2019ல், 0.18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.எய்ட்ஸ் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்க வேண்டும். எய்ட்ஸ் தொற்று உள்ளோரும், நம்மில் ஒருவரே என்பதை மனதில் வைத்து, அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE