சென்னை : முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனுவின் விசாரணையை, வரும், 7ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நீதிமன்றத்துக்கு உதவ, டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் ராஜகுமார் தாக்கல் செய்த மனுவில், 'உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் பற்றி, அவதுாறான வீடியோ பதிவுகளை, முன்னாள் நீதிபதிகர்ணன் பதிவேற்றம் செய்துள்ளார்.'எனவே, முகநுால், கூகுள், யு டியூப் வலைதளங்களில் உள்ள, முன்னாள் நீதிபதி கர்ணனின் பதிவுகளை முடக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.இந்த மனுவுக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 16க்கு தள்ளி வைத்தனர்.இதையடுத்து, முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு எதிராக அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பார் கவுன்சில் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதிகள்சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், விசாரணைக்கு வந்தது. புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மாநகர போலீஸ் ஆணையர் பதில் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. போலீஸ் ஆணையர் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஓய்வு பெற்ற நீதிபதியை நேரில் அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாக, போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''சட்ட விதிகளை பின்பற்றி, முறையாக விசாரணை நடக்கவில்லை;
வெறும் கண்துடைப்பாக உள்ளது. சட்டப்படி, அவரை கைது செய்திருக்க வேண்டும்,'' என்றார்.இருதரப்பு வாதங்களுக்கு பின், விசாரணையை, 7ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். நீதிமன்றத்துக்கு உதவ, டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் ஆணையர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE