திருப்பூர்:வெளியூர்க்காரர் என்று கூறி, விலைக்கு வாங்கிய மனையில் வீடு கட்டவிடாமல் இடையூறு செய்வதாக, பெண்கள் நேற்று கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் தெற்கு தாலுகா, தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கவுண்டம்புதுார். அப்பகுதியில், 2008ல், 'கருணாநிதி நகர்' என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. நகரப்பகுதியில், வாடகை வீட்டில் வசித்த மக்கள், சொந்த வீடு கட்டும் கனவுடன் மனையை வாங்கினர்.கடந்த, 10 ஆண்டுகளாக முயற்சித்தும், அப்பகுதியில் வீடு கட்ட முடியவில்லை. வெளியூர் மக்கள் அங்கு வீடு கட்டக்கூடாதென, சிலர் அடாவடி செய்வதாக, வீட்டுமனை வாங்கியவர்கள் நேற்று கலெக்டரிடம் முறையிட்டனர்.கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த மனு:ஒரு சிலர், எங்களிடம் வீடு கட்ட விடமாட்டோம் என்று அடாவடி செய்து வருகின்றனர்.எதிர்ப்பை மீறி, ஒருவர் வீடு கட்டிய போது, இரவு நேரத்தில் இடித்து விட்டனர். மீண்டும் வீடு கட்ட, இடத்தை பார்க்க சென்ற போது, ஊருக்குள் வரக்கூடாது என்று மிரட்டுகின்றனர்.நாங்கள் விலைக்கு வாங்கிய மனையில் வீடு கட்டி குடியிருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE