குடியாத்தம்: குடியாத்தம், கவுண்டன்ய மகாநதி வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச்சென்ற தாய், மற்றும் இரு பெண் குழந்தைகள், நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள, மோர்த்தானா அணை, 'நிவர்' புயல் மழையால், நிரம்பி வழிந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று, ஆற்றில் வெள்ளம் குறைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளித்தனர். குடியாத்தம் போடிபேட்டையை சேர்ந்தவர், யுவராஜ், 35; இவரது மனைவி, நதியா, 31; இவர்களது இரு பெண் குழந்தைகளான, நிவிதா, 11, ஆறாம் வகுப்பும், அஸ்வினி, 8, மூன்றாம் வகுப்பும், அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மதியம், 3:30 மணிக்கு, கவுண்டன்ய மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்க்கும் ஆசையில், நதியா தன் இரு குழந்தைகளை அழைத்துச் சென்றார். கூடவே, அவர்கள் வளர்த்த இரண்டு நாய்களும் சென்றன. அவர்கள், ஆற்றில் இறங்கி, வேடிக்கை பார்த்தபோது, திடீரென அதிக நீர்வரத்தால், மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த, வளர்ப்பு நாய்கள் வீட்டுக்கு ஓடி, யுவராஜை அழைத்து வந்தன. இந்நிலையில், குடியாத்தம் தீயணைக்கும் துறையினர், இரண்டு மணி நேரம் போராடி, ஒரு கி.மீ., தூரத்தில், மூவரது சடலத்தையும் மீட்டனர். குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE