மேட்டூர்: நவப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் இடையே நீடிக்கும் பனிப்போரால் பயிர்கடன், நகை கடன் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்தூர் ஒன்றியம், நவப்பட்டி ஊராட்சியில், நவப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. சங்க தலைவராக ராஜம்மாள், செயலாளராக வெங்கட்ராமன் உள்ளனர். கடந்த அக்.,6 முதல், நவ., 13 வரை, மருத்துவ விடுப்பில், செயலாளர் வெங்கட்ராமன் சென்றிருந்தார். இதனால், விவசாயிகளுக்கு பயிர்கடன், நகை கடன் வழங்குவதற்காக, காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம், அங்கு பணிபுரியும் ஊழியர் கந்தசாமிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 14ல் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை, மீண்டும் செயலாளரிடம் ஒப்படைக்க, சங்க நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வெங்கட்ராமன் அதை ஏற்காமல் மீண்டும், விடுப்பில் சென்று விட்டார். கந்தசாமியும், நானும் கையெழுத்து போட மாட்டேன் என கூறி விட்டார். இதனால் கூட்டுறவு சங்கத்தில், ஒரு வாரமாக விவசாயிகள் பயிர் கடன், நகை கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர். செயலாளர் விடுப்பில் இருந்த காலத்தில், தலைவர் தன்னிச்சையாக ஒரு பெண்ணை பணியில் சேர்த்ததாக தெரிகிறது. மேலும் ஏப்., 2018 முதல், சங்க ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை தலைவர் வழங்காமல் இன்னமும் நிலுவை வைத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தலைவருக்கும், செயலாளருக்கும் நீடிக்கும் பனிப்போர் காரணமாக பயிர் கடன் பெற முடியவில்லை. கடன் கிடைக்க கூட்டுறவு சங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE