கரூர்: புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சித்த மருத்துவ பிரிவு தொடங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய இடங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களும், இவற்றின் கீழ், 22 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. சின்னதாராபுரம், க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ பிரிவு மருத்துவ சேவையாலும், கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற பீதியாலும், கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் பெற நோயாளிகள் வருகை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை மருத்துவ பிரிவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புன்னம் சுற்று பகுதியில் இருந்து, புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு, ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்த மருத்துவ பிரிவு என எதுவுமே இல்லை. இதனால் அலோபதி மருத்துவத்திலேயே மக்கள் சிகிச்சை பெற வேண்டியதிருக்கிறது. எனவே புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், எந்த விதமான சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இல்லாத நிலையால் அரசு சித்த மருத்துவ பிரிவு புதிதாக தொடங்க வேண்டி, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே, இனியாவது சித்த மருத்துவ பிரிவு தொடங்க நடவடிக்கை எடுத்தால், இப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE