மதுரை :'சிலைகள் நிறுவ தடை உள்ளதை நிறைவேற்ற, எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர், வைரசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை அனுமதி பெற்றும், சிலவற்றை அனுமதி இன்றியும் வைத்துள்ளனர். அத்தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர்.
அப்போது, கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிக்கிறது. மக்கள் சிரமப்படுகின்றனர். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணியருக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்றவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு கூறியதாவது:
சிலைகளை சேதப்படுத்துவது தொடர்கிறது. பல தலைவர்கள், பெயருக்கு வந்து, சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர். சிலைகளாக உள்ள மறைந்த தலைவர்களின் கொள்கைகளை யாரும் பின்பற்றுவதில்லை. பிறந்தநாள், நினைவு நாளில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க, பல கோஷ்டிகளாக பிரிந்து வருவர். அவர்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
இவ்வாறு, அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிலைகள் நிறுவ, ஏற்கனவே தடை உள்ளது. அதை நிறைவேற்ற, எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தமிழக அரசிடம் விபரம் பெற்று, அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். உள்துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, டிச., 14க்கு ஒத்தி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE