மதுரை:மத்திய அரசின் அறிவிப்புகளை ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விருப்பம் தெரிவித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், அந்தர்புரத்தைச் சேர்ந்த சதீஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில், குறிப்பிட்ட பகுதியை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அறிவித்தது.மக்களிடம் கருத்து கேட்காமல், அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். அறிவிப்பு ஆங்கிலம், ஹிந்தியில் உள்ளது. அதை, தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள இயலாது. மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, சதீஷ் மனு செய்தார்.
நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மலைப் பகுதியில், குவாரிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. குவாரிகள் துவங்க, அனுமதிக்கக் கூடாது.மத்திய அரசின் அறிவிப்புகளை ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி, அந்தந்த மாநில உள்ளூர் மொழிகளில் வெளியிட, இந்நீதிமன்றம் விருப்பம் தெரிவிக்கிறது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர், மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, டிச., 14க்கு ஒத்தி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE